தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார் 60 அடி ஆழத்தில்,  தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.

இதனால் அந்த முதியவர் உள்ளே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனை அவ்வழியாக வந்த  பொதுமக்கள் பார்த்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கினர். பின் சுமார் 1 மணி நேரம் போராடி வலை மூலம் அந்த முதியவரை மீட்டு, மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.