பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தற்போது ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.