தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும். தேர்தல் வரட்டும் தீர்மானிப்போம்.

எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் ஏற்கனவே என்ன முடிவெடுத்தோமோ, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.  பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் ? என்பது எங்களுக்கு தெரியாது. பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்து நாங்களும், அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்களும் சேர்ந்து என்ன முடிவு எடுக்க வேண்டுமோ,  அதை எடுப்போம் என தெரிவித்தார்.

அடுத்து பேசிய ஓபிஎஸ் , கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தினம்தோறும் என்னிடம் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மத்திய தலைமையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சரை  டெல்லிக்கு சென்று சந்திப்பது, தேர்தல் குறித்து பேசுவது என படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். இப்போது நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல். இந்தியாவை யார் ஆள வேண்டும் என்கின்ற தேர்தல் ?

தேசிய அளவில் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களால் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழ்நிலை இன்றைக்கு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி இரண்டு முறை ஆண்டு இருக்கிறது. மூன்றாவது முறையும் ஆள்வதற்குரிய தகுதியையும் அது பெற்றிருக்கிறது. ஆகவே அவர்கள் தங்களுடைய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு  தான், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க முடியும்  என தெரிவித்தார்.