லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா  நேற்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் 1 மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

பொதுவாக நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். ஆனால் லியோ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லாமல் வெற்றி விழா நடைபெறும் நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இந்த வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடுகாத்திருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை 5 கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி பார்க்க வரும் கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சி பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக பாஸ் எடுத்துட்டு வர வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தலானது கொடுக்கப்பட்டு இருந்தது. அதே போல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை, இதோடு நிகழ்ச்சிக்கான பாஸ் என மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு தான் நிகழ்ச்சி நடந்தது.

நடிகர் விஜய் பேச  மேடை ஏறும் போதும் ரசிகர்கள் ஆரவாரம் செலுத்தி வரவேற்றார்கள். நான் ரெடி தான் வரவா என்கின்ற சாங்குடன் தான் தனது உரையை தொடங்கினார். அந்த சாங்ல நிறைய இடத்துல பீப் போட்டு, டவ் டவ் என இடங்கள் எல்லா வரிகளையும் அப்படியே பாடி  ரசிகர்களை விஜய் உற்சாகப்படுத்தினார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான நண்பா, நன்பிஸ் என சொல்ல விஜய், இதுவரை நான் தான் உங்களை என் நெஞ்சில் குடி வைத்திருக்கிறேன் என நினைத்தேன். ஆனால் இப்பதான் தெரியுது நீங்கதான் என்ன உங்க நெஞ்சில வச்சிருக்கீங்க. அது குடியிருக்க கோவில்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்கிற அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன் ? உங்கள் உடம்புக்கு செருப்பா தேச்சு போட்டா கூட ஈடாகாது.

ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன். சோசியல் மீடியாவில் என்னுடைய ரசிகர்கள் ரொம்ப கோவமா இருக்காங்க. யாரு ? எதனால ? எப்படி ? அதெல்லாம் பேச வேண்டாம். ஏனென்றால் யார் மனசையும் புண்படுத்த வேண்டாம் என்பது தான் நம்முடைய கொள்கை, நமக்கு நிறைய வேலை இருக்கு.வீட்ல அப்பா அடிக்கிற புள்ள என்ன பண்ணும் ? அது மாதிரி நினைச்சு விட்ருங்க. காந்தி சொல்ற மாதிரி தான் non violence is a powerful weapon அதை ஃபாலோ பண்ணுவோம் என்று சொன்ன நடிகர் விஜய்  வழக்கம்போல அவருடைய குட்டி ஸ்டோரியே சொல்ல ஆரம்பிச்சாரு.

ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல காக்கா, கழுகு , முயல், மான் இதெல்லாம் இருக்கும். இந்த மாதிரி காட்டுக்கு வேட்டைக்கு போறவங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னொருத்தர் ஈட்டி வேல் வைத்திருக்கிறார். ஒருத்தர் யானையை குறி வைக்கிறார். இன்னொருத்தர் முயலை குறி வைக்கிறார்.

இதில் யார் மாஸ் தெரியுமா?  யானைக்கு குறி வைத்தவர் தான் மாஸ் கைக்கு கிடைக்கிறது இல்லாம பெருசா குறிவைத்து இருக்கிறார் இல்லையா ? அது மாதிரி தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படனும். ஆசைகள்,  கனவுகள் இதுல என்ன தவறு இருக்கிறது ?  வீட்டில் குட்டி பையன் அப்பாவோட சட்டையை  போட்டுக்குவான். அப்பா சட்டை பெருசு. அப்பா மாதிரி ஆகணும்னு கனவு காணுகிறான்.

பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட்டாயிடுச்சு. விரல் இடுக்குல ஒரு வரி அதை ஏன் சிகரெட்னு நினைக்கிறீங்க ? அதில் தீர்ப்பை மாற்றி எழுதுற பேனாவா கூட இருக்கலாம். அண்டாவுல கொடுக்கிற கூழாகூட இருக்கலாம். இது மாதிரி பதில் நான் சொல்லி இருக்கலாம்.  சினிமாவை சினிமாவாக பாருங்க. நான் ரெடி தான் சாங்குக்கு இப்படியெல்லாம் எதிர்ப்பு வரும் போது  ஒன்னே ஒன்னு தான் கேட்க தோணுது.

குழந்தைகள்  ஸ்கூலுக்கு போற வழியில எத்தனை ஒயின் ஷாப் இருக்குது ? அதெல்லாம் மைண்ட்ல வச்சு பேசுங்க.  ஸ்கூலுக்கு போற வழியில நிறைய ஒயின்ஷாப் இருக்குது. குழந்தைகள் எல்லாம் அதை குடிச்சுட்டா போறாங்க. அதனால தயவு செஞ்சு சினிமாவை சினிமாவ பாருங்க. ஒரே ஒரு உலகநாயகன் தான்… ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்… ஒரே ஒரு தலை தான்… அது மாதிரி ஒரே ஒரு தளபதி தான். நான் சொல்ல விரும்பல.

ஏன்னா தளபதி என்ற பட்டத்தை நீங்க எனக்கு கொடுத்து இருக்கீங்க. தளபதிக்கு மேல மன்னன். மன்னனுக்கு கீழ தான் தளபதி.  ஆனால் மன்னன் யார் என்பது தான் முக்கியம்?  என்னை ஆள்கின்ற மன்னன் நீங்கதான். நீங்க ஆர்டர் போட்டா…  நான் கட்டளையிட்டால் நான் உங்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என தனது அரசியல் ஆசையை  சொல்லி விடைபெற்றார் .