கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் வேலை பார்க்கும் அருள் ஜீவன் என்ற ஆசிரியர் எனது மகனுடன் நட்பாக பழகியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு கழிவறைக்கு சென்று வந்த எனது மகனின் தோளில் ஆசிரியர் கை போட்டு ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபடுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து எனது மகன் எங்களிடம் கூறி அழுதான். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். இந்நிலையில் கல்வி துறை அதிகாரி ஆசிரியர் அருள் ஜீவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.