கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு மது அருந்தும் போது ரிங்கிளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மனநிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை நாகர்கோவிலில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மேரி அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர் இல்லாததால் வீடு திரும்பினர்.

இதனையடுத்து வீட்டு அறையில் ரிங்கிளும், அவரது மனைவியும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை எழுந்து பார்த்த மேரி துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் தனது கணவர் இருந்ததை பார்த்து அலறி துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரிங்கிள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.