சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில் மைய மூலமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கும் தமிழக அரசின் மானிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

அதேப்போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கான உதவி திட்டத்தில் மூன்று சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வரையறுக்கப்பட்ட வங்கிகள் தமிழ்நாடு தொழில்நுட்ப கழகம் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கடன் உதவி பெறுவதற்கு முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தற்போது இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தலைமுறை தொழில் முனைபவர்களிடமிருந்து எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இன்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான பயண வாகனங்கள், ஜேசிபி ரோடு ரோலர், கலவை எந்திரம், கிரேன்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவிகள், ஆழ்துணை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற தொழில்களுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் தகுதியுடையவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விவரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கலெக்டர் அலுவலகம் வளாகம் சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.