சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் லட்சுமி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் லட்சுமியின் தாய் இறந்ததால் அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்கிறார். இதனால் லட்சுமியுடன் அவரது தங்கை மகேஸ்வரியும் வசித்து வருகிறார். சமீபத்தில் மகேஸ்வரியை ஒரு விடுதியில் சேர்த்து விட சதீஷ்குமார் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் லட்சுமிக்கும், சதீஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.