நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களங்காணி ஊராட்சியில் ரூ.1.50 லட்சத்தில் மாரியம்மன் கோவில் முதல் களங்காணி முதன்மை சாலை வரையில் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கும் பணி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குட்டை பலப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் சிரியா சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இடையப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முதல் கணவாய் வரை குடிநீர் இணைப்புகள் குழாய்கள் அமைக்கப்பட்டதையும், காரைக்குறிச்சி ஊராட்சியில் கிழக்குட்டை மாரியம்மன் கோவில் வடக்கு தெருவில் ரூ.2 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டதையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின் படி பணிகள் தரமாக நடைபெற்றுள்ளதா? என்பதை அவர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து எடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் மதிய உணவு கூடம் அமைக்கும் பணியையும், மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற மதிய உணவின் தரத்தையும் அவர் ஆய்வு செய்துள்ளார். மேலும் எடையப்பட்டி குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் குழந்தைகளின் வருகை பற்றி அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறிந்தார்.