சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சியில் மகாலட்சுமி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ஒரு மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீரென பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த நகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே பெட்ரோல் ஊற்றியதால் உடலில் எரிச்சல் ஏற்பட்டு மகாலட்சுமி தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரின் காலில் மகாலட்சுமி விழுந்து கதறி அழுதார். அவர் கூறியதாவது, நகராட்சியில் வேலை பார்க்கும் சக துப்புரவு ஊழியர் அதிகாரி போல நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டுகிறார்.

அவர் வருகை பதிவேட்டில் ஆப்ஷன் போடுவதும், என்னை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தியும் கொடுமைப்படுத்துகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார். அவரை தாரமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.