சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டு முல்லைவாடி கம்பன் தெருவில் விஜயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அத்விகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று இரவு 8 மணிக்கு வீட்டுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மூன்று அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதற்கிடையே குழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடிய பெற்றோர் தண்ணீர் தொட்டியில் குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தண்ணீர் படிப்பதற்காக பெற்றோர் தண்ணீர் தொட்டியை திறந்தனர். பின்னர் தொட்டியை மூடுவதற்கு முன்பு வீட்டிற்குள் சென்று திரும்பி வருவதற்குள் குழந்தை தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.