மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை விநாயகா நகர் இளங்கோ குறுக்கு தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி பத்மாவதி கூடல் மலையில் இருக்கும் மாயாண்டி சுவாமிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மூதாட்டியிடம் நகை போட்டு வந்தால் யாராவது பறித்து சென்று விடுவார்கள். அந்த நகையை கழற்றிக் கொடுங்கள் நான் பேப்பரில் வைத்து மடித்து தருகிறேன் என கூறினார்.

இதனை நம்பி பத்மாவதி நகையை கொடுத்துள்ளார். அந்த வாலிபர் நகையை பேப்பரில் மடித்து வைத்துள்ளேன். அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை தொடர்ந்து பேப்பரை பிரித்துப் பார்த்த பத்மாவதி நகைக்கு பதிலாக கல் இருந்தது கண்ட அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பத்மாவதி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் நகையை பறித்துச் சென்ற மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.