இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம் என்பதை கனடாவைச் சேர்ந்த கிம் கிரீன்வுட் என்ற சுற்றுலாப் பயணி உலகிற்கு உணர்த்தியுள்ளார். ஜல்காவ் முதல் சந்திரபுரா வரை செல்வதற்காக, ‘நன்றாகத் தூங்கலாம்’ என்ற எண்ணத்தில் தவறுதலாக ஸ்லீப்பர் கிளாஸில் (Sleeper Class) டிக்கெட் புக் செய்த இவருக்கு, அடுத்த 7 மணி நேரம் ஒரு வாழ்நாள் நினைவாக மாறியுள்ளது.
ரயில் பெட்டிக்குள் நுழைந்த இவர்களைச் சுற்றி அங்கிருந்த சிறு குழந்தைகள் ஆர்வத்துடன் கூடினர். பொதுவாக இதுபோன்ற சூழலில் எரிச்சலடையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்தியில், இவர்கள் அந்தச் சூழலை அப்படியே ரசித்தனர். அங்கிருந்த குழந்தைகள் இவர்களுக்குத் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகளைக் கொடுத்து உபசரித்ததோடு, அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
View this post on Instagram
“ஒரே குடும்பமாக மக்கள் பழகுவதைப் பார்த்து வியந்து போனேன்; அந்த 7 மணி நேரப் பயணத்தில் ஒரு நிமிடம் கூட நாங்கள் தூங்கவில்லை, ஆனாலும் அந்த அனுபவத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்” என கிம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்நிய நாட்டவர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகப் பாவித்துப் பழகிய இந்திய மக்களின் இந்த மனிதாபிமான வீடியோ இப்போது இணையத்தில் ‘ஹார்ட்டின்களை’ அள்ளி வருகிறது.
