சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷீலா தனது தந்தையின் ஓய்வூதிய பணத்தை வைத்து தாயை பராமரித்து வந்தார். கடந்த 3 நாட்களாக ஷீலா வெளியே வரவில்லை.

அவரது வீடும் பூட்டி கிடந்தது. மேலும் ஷீலாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ஷீலா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவரது உடலுக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட ஜாஸ்மின் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். உடனடியாக போலீசார் ஷீலாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் இறந்தது தெரியாமல் ஜாஸ்மின் உடலுக்கு அருகே மூன்று நாட்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.