ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம் சரியில்லாத அமீர் தனது மனைவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சாகுல் ஹமீது மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அமீரும் அவரது மனைவியும் ஊஞ்சல் கட்டி விளையாடிய தங்களது மகன் சேலையில் கழுத்து மாட்டிக்கொண்டு இறுக்கப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது மகனை மீட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.