திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் சர்வேஸ்வரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சர்வேஸ்வரனுக்கு குடும்பத்தை நடத்தும் அளவிற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அந்த பணத்தை வைத்து 3 குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது, திருமணம் செய்து கொடுப்பது என லட்சுமி புலம்பி வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் கடந்த 27-ஆம் தேதி லட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த சர்வேஸ்வரன் தனது மனைவியை மீட்டு நிலகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனையடுத்து லட்சுமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.