திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற வருண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வருணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

அப்போது நந்தவனப்பட்டி அருகே இருக்கும் கல்குவாரி குட்டையில் வருணின் சைக்கிள் நின்றது. இதனால் குளிக்க சென்ற வருண் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.