கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அஞ்சாபுலி என்பவரது மகள் கனிமொழி(26) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரதிஷா(3) என்ற மகளும், கவின்(1 1/2) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் கனிமொழி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவினை குளிப்பாட்டுவதற்காக வீட்டு தோட்டத்தின் படிக்கட்டு அருகே விறகு அடுப்பில் கனிமொழி வெந்நீர் போட்டுள்ளார். அப்போது படிக்கட்டில் இருந்து இறங்கிய கவின் எதிர்பாராதவிதமாக வெந்நீர் பாத்திரத்தில் விழுந்து வலி தாங்க முடியாமல் கதறி அழுதான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கவினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவின் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.