வாட்சப் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மோசடி என்பது உலக அளவில் பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட, இந்தியாவில் தான் அது அதிகமாக நடைபெறக்கூடிய குற்றமாக இருக்கிறது. அதிலும் தற்போது வாட்ஸ் அப் செயலி வாயிலாக அதிக அளவில் ஆன்லைன் மோசடி நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த அப்டேட் பெயர் Silence Unknown Callers என்பதுதான். வாட்ஸ் அப் முறையாக உபயோகிக்க  தெரிந்தவர்கள் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கவோ, அல்லது அதிலிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு உடனடியாக ரிப்ளை செய்யவும் தயங்குவார்கள்.ஆனால் சிறுவர்களோ, வயதானவர்களோ அல்லது செயலியை முறையாக பயன்படுத்த தெரியாதவர்களோ தெரியாத எண்களில் இருந்து வரக்கூடிய அழைப்புகளை தவறுதலாக அட்டென்ட் செய்வதன் மூலமாக பல விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து அதிகமான ஆன்லைன் விளம்பரங்கள் அல்லது தேவையற்ற அழைப்புகள் வருவதாகவும்  அதன் மூலம் அதிக மோசடி நடைபெற்றிருப்பதாகவும்  புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வகையான பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த ஆப்ஷன் உங்களுடைய whatsapp  செட்டிங்கில் பிரைவசி பக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இதை ஆக்டிவேட் செய்த பின்பு உங்களது காண்டாக்ட் இல் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து ஏதேனும் அழைப்பு வந்தால் அது வெளியில் காட்டாது. மாறாக நோட்டிபிகேஷன் இல் நிச்சயமாக காட்டும். பின் அழைப்பு வந்த எண்ணை பொறுமையாக  ஆராய்ந்து பதில் அளிப்பதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.