இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திரா நகருக்கு செல்வதற்காக கடந்த 21-ஆம் தேதி 30 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் ரேபிடோ பைக் புக் செய்துள்ளார். இரவு 11.10 மணிக்கு இளம்பெண்ணின் இடத்திற்கு ரேபிடோ பைக் ட்ரைவர் வந்துள்ளார்.

அப்போது ஓடிபி நம்பரை சரிபார்ப்பதற்காக பெண்ணின் செல்போனை வாங்கிய டிரைவர் ட்ராப் லொகேஷனை இந்திரா நகரில் இருந்து தொட்டபெல்லா புரத்திற்கு மாற்றியுள்ளார். இது தெரியாமல் அந்த பெண் பைக்கில் ஏறி சென்றுள்ளார். சற்று நேரத்தில் பைக் வேறு பாதையில் செல்வதை கவனித்த இளம்பெண் அது குறித்து டிரைவரிடம் கேட்க அவர் பெண்ணின் செல்போனை பிடுங்கியுள்ளார். அதோடு இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஓடும் பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சியை ஏஎன்ஐ தற்போது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பெங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.