கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தியா(16), சௌமியா(13) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சின்ன பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோகன் மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் புறப்பட்டார். அவர்கள் பணிக்கன்குப்பம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்ற போது மோகன் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்த முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பொக்லைன் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தியா பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகன், கஸ்தூரி, சௌமியா ஆகிய 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.