புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே வெடிப்புகளுடன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இருந்தது.

இருப்பினும் அந்த கட்டிடத்தில் மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பள்ளிக்கு மாணவர்கள் செல்லவில்லை. மறுநாள் காலை பள்ளிக்கு சென்ற போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பறை கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து சிமெண்ட் பூச்சுகள் வகுப்பறைக்குள் சிதறி கிடந்ததை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் நடந்த அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அச்சத்துடன் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறோம். எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.