டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும், மது கடைகள் மற்றும் மது அருந்து விடுதிகளில் மது அருந்துவது தொடர்பாக தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்பட வேண்டும், விலைப்பட்டியல் தமிழில் அச்சடிக்கப்பட வேண்டும்,  21 வயதுக்கு கீழானவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு ஏற்கனவே வழக்கினை தீர்ப்பினை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்றைய நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்,  தற்போதைய சூழலில் மது அருந்துபவர்களால் சமூகத்தின் கட்டமைப்பே  பாதிக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மது அருந்துபவர்களால் தனி மனிதர்கள், குடும்பம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக சமூகமே பாதிப்புக்குள்ளாகிறது.

தற்போதைய காலத்தில் இளம் தலைமுறையினர் அதிகமாக மது பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆகவே மதுபானம் விற்கவும், வாங்கவும், உபயோகப்படுத்தவும் உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதுபோல வாய்ப்புகள் வழங்கப்படும் என விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதேபோல மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும்.

அதேபோல 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள். முக்கியமாக பொதுமக்களின் நலன் கருதி மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள்.