கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ஷில்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷில்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த ஷில்பாவின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, சிவராஜை கைது செய்ய வலியுறுத்தி ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் ஷில்பாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.