கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருப்பவர் சுதீப். இவர் தமிழில் புலி மற்றும் நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் கிச்சா சுதீப் தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்லை என அண்மையில் அறிவித்தார். ஆனால் திடீரென முதல்வர் பசுவராஜ் பொம்மை அவர்களுடன் சேர்ந்து கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று பேட்டி கொடுத்துள்ளார். நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவரின் வீட்டிற்கு 2 மிரட்டல் கடிதங்களை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளார்கள்.

அந்த கடிதத்தில் நடிகர் சுதீப்பின் ஆபாச வீடியோக்கள் வெளியிடப்படும் எனவும், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், சென்னை, துபாய் போன்ற பல இடங்களில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுதீப்பின் மேனேஜர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் சுதீப் தனக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பியது யார் என்பது தெரியும் எனவும் அவர்களுக்கு நான் தக்க பதிலடி கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது கர்நாடகா அரசியல் வட்டாரத்திலும் கன்னட திரை உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.