கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன் நகர் புது ரோடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுகமணி பகுதியில் வசிக்கும் கரிகாலன் என்பவரது வாழைத்தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் தீயை அணைப்பதற்காக அங்கமுத்து மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு வாழை தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அங்கமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.