கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரசேகரன்(30) மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரசேகரனுக்கு கவிப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கவிப்பிரியா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கவிப்பிரியா உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வீரசேகரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீரசேகரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.