சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த கரண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கரணின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கரண் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் அதிலிருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் கரண் அழித்துவிட்டார். இதனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது மர்மமாகவே இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.