திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் ஓமலூர் தெருவில் அழகுபாண்டி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கு முத்தாலம்மன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் ஜோகிதா(18) திருச்சி தென்னூர் பாரதி நகரில் இருக்கும் தனது அத்தை மகாலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் ஜோகிதாவின் அக்கா பவித்ராவும் திருமணம் முடிந்து மகாலட்சுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். நேற்று மகாலட்சுமி மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற பிறகு பவித்ரா தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆனால் ஜோகிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா அத்தை வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்களுடன் தனது தங்கை இறந்து கிடந்ததை கண்டு பவித்ரா கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோகிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜோகிதாவை கொலை செய்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.