கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி பகுதியில் கட்டிட காண்டிராக்டரான ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபிக்கும் (23) கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் மரிய தாஸ் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மரியதாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதி ஜெனிலாவை நள்ளிரவு நேரத்தில் மரியதாஸ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

இதுகுறித்து கர்நாடக மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர். இதனையடுத்து ஜெனிலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் ஜெனிலாவின் உடலை கொண்டு வந்து அவரது கணவர் வீட்டிற்கு முன்பு புதைத்தனர். அந்த வீட்டில் தற்போது மரியதாசின் பாட்டி மட்டுமே இருக்கிறார். அந்த வீட்டு வாசல் முன்பு மரியதாசின் கொடூர செயலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு புது பெண்ணின் உடலை புதைத்து விட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.