திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்கரை அருகே இருக்கும் சினிமா தியேட்டர் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு செயல்படும் மதுபான பாரில் சக்திவேல், பெத்தமலை, பெருமாள், சிவக்குமார், சங்கர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பாரை மூடி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் பாரின் கதவை தட்டினர். அப்போது சக்திவேல் வேலை நேரம் முடிந்ததால் பாரை மூடிவிட்டோம் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் கதவை தள்ளி உள்ளே நுழைந்து பட்டா கத்தியால் சக்திவேலை வெட்டியுள்ளனர்.

இதை தடுக்க முயன்ற மற்ற பணியாளர்களை சோடா பாட்டில்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து பணியாளர்கள் அலறி சத்தம் போட்டதால் மர்ம கும்பல் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் படுகாயமடைந்த சக்திவேலை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரது வலது கை, நெற்றி, தலை உள்ளிட்ட இடங்களில் 24 தையல்கள் போடப்பட்டது. பின்னர் சக்திவேல் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.