சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் வி.பி.சி நகரில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வன் மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் இருந்து 94 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வித்யா கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப தருமாறு கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காயமடைந்த இருவரும் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.