ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். முன்னதாக சாலையோர வாகன நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்துவதற்காக டிரைவர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார் அவருக்கு திருநாவுக்கரசு என்பவர் வேனின் படிக்கட்டில் நின்றபடி வழி காட்டியுள்ளார்.

அப்போது திடீரென மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி வேன் மீது உரசியதால் படிக்கட்டில் நின்ற திருநாவுக்கரசு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.