திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் மணிகண்டன் உட்பட 5 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தோட்டத்து பகுதியில் குடிசை அமைத்து பாறைகளை தகர்ப்பதற்கு தேவையான வெடி பொருட்களை அங்கு வைத்திருந்தனர். நேற்று காலை தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் குடிசையில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மணிகண்டன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெடி பொருட்களை அனுமதி இன்றி வைத்தார்களா? அது எந்த வகையான வெடிப்பொருட்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.