திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் பாலத்தின் தூண்களில் முதியவர் சுவரொட்டிகளை ஒட்டினார். அந்த சுவரொட்டிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வேடசந்தூரில் வசிக்கும் கிருஷ்ணசாமி என்பது தெரியவந்தது.

சுதந்திரப் போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி கடந்த 60 வருடங்களாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு உரிய அறிவுரைகள் கூறி போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர் ஓட்டிய சுவரொட்டிகளையும் போலீசார் அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.