கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சீனிவாசனின் உறவினர்கள் அவரது இறப்பிற்கு இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.