கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று மதியம் வழக்கம் போல அந்தப் பெண் நடந்து சென்ற போது ஆட்டோ டிரைவர்கள் கேலி செய்ததால் கோபமடைந்த அவர் வீட்டிற்கு சென்று கம்பு மற்றும் வெட்டு கத்தியை எடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து அவர் ஆட்டோ டிரைவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கம் முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் அந்த பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதனை பார்த்த சில வாலிபர்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வினோத், சசி, விஜயகாந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திபின், அரவிந்த் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.