கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மோகன் குமார், ஷோபனா, மோகன் குமாரின் தாய் மணி ஆகியோர் தங்களுக்கு அரசு உயர் பதவியில் இருப்பவர்களை தெரியும் எனவும், பணம் கொடுத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கி தருவோம் என கூறினார்கள். இதனை நம்பி பலர் வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர்.

இதனையடுத்து மோகன் குமார் போலி ஆணைகளை தயார் செய்து பணம் கொடுத்தவர்களுக்கு அனுப்பியுள்ளார். அது தேவையானது என்பதை அறிந்து பாதிக்கப்பட்டவர்கள் மோகன் குமாரிடம் சென்று பணத்தை திரும்ப கேட்டனர். இதுகுறித்து பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் மோகன் குமாரை நம்பி நான் பலரிடமிருந்து பணம் வாங்கி 36 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் அந்த பணத்தில் வேன் மற்றும் கார்களை வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். எனவே மோசடி செய்த பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோகன் குமார், மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேனை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஷோபனாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.