சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு அருகே உள்ள சலவை செய்யும் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருமலைநாதனிடம் சாலையில் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக தெரிவித்தனர். அது உங்களுடையதா? என கேட்டு திருமலைநாதனின் கவனத்தை திசை திருப்பி அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணப்பையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திருமலைநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.