சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிம் கார்டு நிறுவனம் மூடப்பட்டதால் செல்போன் கோபுரமும் செயல்படாமல் இருந்தது.  இந்நிலையில் சிம் கார்டு நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது கோபுரம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சிம்கார்டு நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்காமல் இருந்தனர். மேலும் செயல்படாமல் இருந்த செல்போன் கோபுரம் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் இருந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் செல்போன் கோபுரத்தை பிரித்து பழைய இரும்பு கடையில் போட்டு விற்று விட்டனர்.

இந்நிலையில் தங்களுக்கு தரவேண்டிய வாடகை பாக்கியை கொடுத்தால் செல்போன் கோபுரத்தை ஒப்படைத்து விடுவதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த செல்போன் கோபுரத்தின் மொத்த விலை 8 1/2 லட்சம் தான். ஆனால் வீட்டடு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பாக்கி அதிலும் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.