சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் உலக நாதாபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் குமார், பிரகாஷ் உட்பட 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தரையில் இருந்து சுமார் 10 அடிவரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பத்து அடி உயரமுள்ள பழைய மழை நீர் கால்வாய் சுவர் இடிந்து பள்ளத்தில் விழுந்ததால் பிரகாஷும், அம்ரேஷ் குமாரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அம்ரேஷ் குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.