தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில் ஏறும் போது, அவ்வழியாக சென்ற தாழ்வான மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

அதன்பின் வனத்துறையினர் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழக்கும் நேரடி காட்சிகள் குறித்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.