கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் செல்வராஜ் மது குடித்து கொண்டிருந்தபோது அவருக்கும் கோகுல், ராகுல் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் அண்ணன், தம்பி இருவரும் செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் செல்வராஜ் சடலமாக கிடந்தார் இதனை அறிந்த செல்வராஜன் உறவினர்கள் அவரை அடித்து கொலை செய்திருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போலீசாருடன் முறையிட்டனர்.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியுள்ளனர். பின்னர் செல்வராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோகுல், ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, மது குடித்துவிட்டு செல்வராஜ் கோகுல், ராகுல் ஆகியோரின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் அவரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து செல்வராஜ் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று மது குடித்துவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு செல்வராஜ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.