கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்துள்ளார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது முருகேசன் அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.