கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜிலா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜிலாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.