கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் ஒரு மொத்த பொருட்கள் வியாபாரி எனவும், குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக அளவிலான கட்டுமான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை நம்பி குமரேசன் இணையதளம் மூலம் தனக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

அதன் பிறகு மர்ம நபர்கள் குறைந்தபட்சம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 915 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதனை நம்பி குமரேசன் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கட்டுமான பொருட்கள் வந்து சேரவில்லை. இதனையடுத்து அந்த நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.