திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டியில் புகழ்பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனங்களை கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள். இந்த கோவிலில் பூஜை செய்வது தொடர்பாக குப்பம்பட்டியை சேர்ந்த இரு தரப்பு பூசாரிகளுக்கு இடையே தகராறு இருந்தது. நேற்று ஒரு தரப்பினர் பூஜை செய்து கொண்டிருந்த போது மற்றொரு தரப்பினர் நாங்களும் பூஜை செய்வோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆடி மாதத்திற்கு மட்டும் இரு தரப்பினரும் தலா 15 நாட்கள் பூஜை செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.