கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூருக்கு சென்றுள்ளார். வரும் வழியில் டி.ஜி.பி ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு திடீரென சென்று பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் முக்கிய குற்ற வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார். இதனையடுத்து பதிவேடுகளை நல்ல முறையில் பராமரித்து வைத்திருந்ததற்காக டி.ஜி.பி சைலேந்திரபாபு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதேபோல கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று அனைத்து பதிவேடுகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் ஆவணங்களை முறையாக பராமரித்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.