நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் கோபமடைந்த ஒரு மாணவர் பென்சில் சீவ பயன்படுத்தும் சிறிய கத்தியால் மற்றொரு மாணவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் கை மற்றும் முதுகில் படுகாயம் ஏற்பட்டு அலறி துடித்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவரின் முதுகில் 7 தையல் போடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.