ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நம்பியூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது சதீஷ்குமார் முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லட்சுமி, சுமதி உள்பட பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.